உள்ளத்து ஓசை

Friday, July 30, 2004

பிரசவத்தில் கணவனின் பங்கு

மனைவியின் பிரசவத்தில் கணவன் உடனிருப்பது அவர்களின் உறவுப்பிணைப்புக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு உண்மைக்கதை:

சிங்கையிலே வெளிநாட்டவர்களுக்கு பிரசவ செலவு மிக அதிகம்.
(அதிகமில்லை ஜெண்டில்மன் உன் சொத்துமொத்தமும் எழுதிவைத்துவிடு அது போதும்!)
இதனால் ஏழாம் மாதமே மனைவியை தாயகத்துக்கு அனுப்பவேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது, ஏனென்றால் விமானத்தில் அதன்பின் அனுமதிக்கமாட்டார்கள்.

ஓர் ஒற்றை அறை குடியிருப்பில்...

"என்னங்க, உங்களை விட்டுபோக மனசே இல்லீங்க. கட்டாயம் பிரசவநேரத்தில நீங்க கூட இருக்கணும், இங்க வேலை அதனால வரமுடியலைன்னு சாக்குபோக்கு சொல்லக்கூடாது!"

"எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வருது, ஹும்! மறுபடி அமைதி, தனிமை, விரக்தி. ஆனா குழந்தைபிறந்த பிறகு உன் முகத்தில் வரப்போகிற மகிழ்ச்சியை பாக்கிறதுக்காக இதெயெல்லாம் பொறுத்துக்கத்தான் வேணும். எல்லாத்துக்கும் கம்யூட்டர்ன்னா சமயத்தில எனக்கே வெறுப்பாத்தான் இருக்கு, இனி உன்னையும் கொஞ்சகாலம் அதுவழியாத்தான் பாக்கணும். கவலைப்படாதே பிரசவ சமயம் கட்டாயம் நான் கூட இருப்பேன். டாக்டரை பாத்து எப்ப பிரசவமாகும்னு கேட்டு சொல்லு அதுக்கு 15 நாள் முன்னாடியே வரேன். சேச்சே! அழக்கூடாது"

"கொஞ்சம் பயமா இருக்குங்க, நீங்க கூட இருந்தா தைரியமா இருக்கும்"

"பயப்படாதே, எல்லாம் நல்லபடி நடக்கும். உன்னை பாத்துக்க என் ஒருத்தனைத்தவிர எல்லாருமே உன் கூடவே இருப்பாங்க, நானும் சரியான நேரத்தில வந்துடுவேன், அப்புறம் என்ன கவலை?"

ஓர் அதிகாலை, சாங்கி விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில்...

"அது உங்க அம்மாங்களா? நீங்களும் இண்டியன் ஏர்லைன்ஸ் தானே"

"ஆமாங்க இங்க மூணுமாசம் வந்திருந்தாங்க, எங்க குழந்தைய கூட்டிகிட்டு அவங்க ஊர் திரும்புறாங்க"

"அப்டீங்களா, இது என்னோட மனைவி, பிரசவத்துக்காக ஊருக்கு அனுப்புறேன். அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் தொணையா இருக்கட்டும்"

"ஓ! அதுக்கென்ன, அம்மாவுக்கு எழுத படிக்க தெரியாது, கைக்கொழந்தையும் வைச்சிருக்கறதால ஏர்போர்ட் ஆளுங்களே உள்ள கொண்டு பிளைட் ஏத்தீடுவாங்க, அவங்க கூடவே இவங்களையும் அனுப்பீடுங்க"

சிறிது நேரத்தில் சிப்பந்தி வந்து அழைக்க, மனமே இல்லாமல் அவனும் அவளும் பிரிகிறார்கள்,

"உள்ள வைட்டிங் ரூமுக்கு போனதுமே எனக்கு போன் பண்ணு. விமானம் கிளம்பறவரை இங்கதான் இருப்பேன், கவலைப்படாதே எல்லாம் நல்லபடி நடக்கும்"

பிறகு பிரசவதேதி நெருங்கிய ஒரு நாள் மாலை சென்னையில் ...

"டாக்டர், பிரசவத்தின்போது நானும் கூட இருந்தா என் மனைவிக்கு ரொம்ப தெம்பா இருக்கும். அதுக்கு உங்க பர்மீஷன் வேணும்"

"பர்மீஷன் தர்றதைப்பத்தி எனக்கு ஒண்ணுமில்லை, நார்மல் பிரசவம்னா நீங்களும் இருக்கலாம், ஆனா சிசேரியன்னா அனுமதிக்க முடியாது. இப்ப இருக்கிற நிலையிலே அனேகமா இது சிசேரியனாதான் இருக்கும். இயற்கையான பிரசவம்தான் வேணும்னா அதை சிடிமுலேட் பண்ண இஞ்செக்ஷன் குடுக்கலாம்"

"அதெல்லாம் வேணாம் டாக்டர், அதுல வலி அதிகமிருக்கும்னு கேள்விப்பட்டேன். சிசேரியன்னா அனெஸ்தீசியா எப்படி டாக்டர்"

"லோக்கல் அனெஸ்தீசியா தான் முதல்ல கொடுப்போம். பேஷண்டுக்கு வலி தெரியாது. குழந்தை பிறந்ததும் அவங்களாலயும் பாக்க முடியும். ரொம்ப பயந்தாதான் மயக்கம் கொடுப்போம். உங்களுக்கு ஒரு உதவி வேணும்னா பண்ணலாம், கேமிரா குடுத்தா ஆப்பரேஷன் பண்ணும்போது படம் எடுத்து தரச்சொல்றேன்"

பிறகு சிசேரியன் என்று முடிவான பின் ஒரு சுபயோக சுபதினம் குறிக்கப்பட்டது அதற்கு
முதல் நாள் இரவு ஆஸ்பத்திரி அறையில் ...

"ஒண்ணும் பயப்படாதே! சிசேரியன்னா இன்னும் சுலபம், உனக்கு சிரமம் அதிகம் இருக்காது. உன்னுடைய வலியை நீ உணர்ற நேரத்துல அதை ஈடுகட்ட நம்ம பையன் பக்கத்துல இருப்பான்"

"நீங்கதான் பிரசவ சமயத்தில பக்கத்துல இருக்கமாட்டீங்க"

"நானென்ன செய்றது ஆப்ரேஷன்கிறதால டாக்டர் உள்ள விடமாட்டாங்க, நான் அந்த ரூமுக்கு வெளியவேதான் இருப்பேன். உனக்கும் மயக்க மருந்து குடுத்திருவாங்க. யப்பா! இங்க கொசுக்கடிதாங்க முடியலை"

மறுநாள் காலை ...

மனைவியை அவர்கள் தள்ளிக்கொண்டு (அட! ஸ்டெச்சரில்தான்) தியேட்டருக்குள் போவதை பார்த்தபடி நிற்கிறான் அவன். பிறகு குறுக்கும் நெடுக்குமாக நடக்கும்போது அது சற்று சினிமாத்தனமாக இருப்பதாக தனக்குள் நினைத்துக்கொள்கிறான். ஏனோ அவனிடம் பதட்டமே இல்லை. தாயும் சேயும் நலமாக இருக்க இறைவனிடம் நேரடியாக பேசுவது போல மனதுக்குள் வேண்டிக்கொள்கிறான். ஒரு உயிர் போய்த்தான் ஆகவேண்டுமெனில் அது மகனாகவே இருக்கட்டும் மனைவி மிஞ்சட்டும் என்று இறைஞ்சுகிறான்.

நர்சுகள் மாறிமாறி உள்ளே போவதும் வருவதுமாக இருந்தார்கள். வெளியே அனைவரும் குழந்தையின் அழுகுரல் கேட்க ஆவலாய் காதுகளை தீட்டிவைத்து காத்திருந்தனர்.

வெளியே ஓட்டமும் நடையுமாய் வந்த நர்ஸ் "ஆப்ரேஷன் முடிஞ்சது. பின்பக்கம் முழுதாய் திறக்கிறமாதிரி நைட்டி ஒண்ணு குடுங்க", என்றார்.

"அப்படி ஏதும் இல்லீங்களே, முன்னமே சொல்லியிருந்தீங்கன்னா வாங்கி வைச்சிருப்போம். இப்ப என்ன பண்ணுறது? இருக்குற நைட்டியில பின்னாடி கிழிச்சிடலாமா?"

"சரி அப்டியே செய்ங்க"

பின்னர் உள்ளே போய் மீண்டும் திரும்ப வருகிறார். "இது ஈரமா இருக்கு புதுசா வாங்க சொன்னாங்க டாக்டர்"

இந்த நேரத்தில் வெளியே போகப்பிடிக்கவில்லை அவனுக்கு ஆனாலும் வேறு வழியில்லை. அப்பாவை அழைத்துக்கொண்டு கடைதேடி ஓடுகிறான் அவன்.

கண்ணில் பட்ட கடையில் கேட்ட விலையைக்கொடுத்து வாங்கிக்கொண்டு வரும் முன் குழந்தையை அறைக்கு கொண்டு வந்திருந்தார்கள். அவனுடைய மாமா பெரியவர் என்னும் முறையில் குழந்தையை கையில் வாங்கியிருந்தார். அனைவரும் மகிழ்சியாக இருந்தனர். அவனுடைய அப்பா தயாராக வைத்திருந்த இனிப்பை எல்லோருக்கும் வழங்கினார். அவன் ஒருமுறை பார்த்தான் குழந்தை செக்கச்செவேலென்று இருந்தான். சூடு வேண்டுமென்று விளக்கு வைத்திருந்தார்கள்.

அவன் கண்கள் அவளைத்தேடின. அவளை தள்ளிக்கொண்டு வந்தார்கள், ஸ்ரெச்சர் கூடவே அவளின் தாயும் நடந்தார். அவள் கண்ணில் இருந்து கண்ணீர் கோடாக இருபக்கமும் இறங்கியிருந்தது. வாய், வலிக்குதும்மா என்று முணுமுணுத்தபடி இருந்தது, உதடுகள் வறண்டிருந்தன. அவனுக்கு வேதனையாக இருந்தது,மனதுக்குள் இவள் என் குழந்தை என்றும் இவளை நான் தான் வளர்கிறேன் என்றும் எண்ணுகிறேனே, இவள் எவ்வளவு வலி எனக்காக தாங்கிக்கொண்டிருக்கிறாள் என்று வியந்தான். அவள் கையை ஆறுதலாக பற்றிகொண்டான். அவர்களின் கண்கள் சந்தித்தபோது உதடுகள் சொல்லாத எத்தனையோ சேதிகள் பரிமாறப்பட்டன. வலி குறைய தான் ஏதும் செய்யமுடியுமா என்று யோசித்து டாக்டரிடம் விரைந்தான்.

டாக்டர் கேமிராவை கையில் திணித்தார். "குழந்தையை படம் எடுக்கல, ஆப்பரேஷன் பண்றத மட்டும் சில ஸ்னேப்ஸ் எடுத்திருக்கேன். கவலைப்படாதீங்க, வலி குறைய தேவைப்பட்டா (மட்டும்) மருந்து தருவோம்", என்றார்

அவன் யாரும் இல்லாத மூலைக்கு ஓடினான் அந்த படங்களைப்பார்க்க. அதைப்பார்ப்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை.

முதல் படத்தில் அவள் மருத்துவர்களிடம் ஸ்னேகமாக சிரித்துக்கொண்டிருந்தாள். பச்சை நிறத்துணியால் அவளை மூடியிருந்தார்கள் வயிற்றில் வெட்டப்படவேண்டிய இடம் மட்டும் திறந்திருந்தது. முதுகுத்தண்டில் மரத்துப்போக ஊசி போட்டிருப்பார்கள்

அவளால் தன் வயிறு கிழிக்கப்படுவதை பார்க்க முடிந்திருக்கிறது, பார்த்து பயந்துவிட்டாள். பிறகு அவளுக்கு மயக்கமருந்து கொடுத்துவிட்டார்கள் (இதெல்லாம் டாக்டர் சொல்லி அவன் தெரிந்துகொண்டான்)

இரண்டாம் படத்திலேயே வயிறு வெட்டுப்பட்டிருந்தது. உட்புறம் குழிவாகத்திறந்திருந்தது. பச்சைத்துணியின்மேல் சில இடங்களில் ரத்தம் தேங்கியிருந்தது. சதைத்துணுக்குகள் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருந்தன.

அதற்குமேல் அவனால் அப்போது பார்க்க முடியவில்லை. அவள் மேல் கோபம் கொள்ளும் நாளில் அதைக்கட்டாயம் பார்க்கவேண்டும் என்று பத்திரப்படுத்தினான். இப்போதும் அந்த படங்களை அவன் சில சமயங்களில் பார்க்கிறான், அந்த நேரங்களில் உள்ளுக்குள் பீறிடுகிறதே அதுதான் அன்பா என்று சிந்தித்தபடி...

Tuesday, July 20, 2004

உஷார்

பயந்தபடியே நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இப்படி நடக்கலாம் என்று முன்னமே யூகித்ததுதான்.

நடந்தது என்ன? - நேரடி ரிபோர்ட்
தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ரகசிய சந்திப்பில் காரசாரமான வாக்குவாதம்.
விஷயம் இதுதான், படாதபாடுபட்டு சாட்டிலைட் சானல்களில் ஸ்லாட் வாங்கி கைக்காசு போட்டு நாம் தொடர்
எடுத்தால் கதாசிரியர்கள்/டைரக்டர்கள் நம்மிடமே பிலிம் காட்டுகிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் குமுறல்.
பனிப்போரைவிட்டு பானிப்பட் போருக்கே ஆயுத்தமாக திடீர் முடிவு.

தயாரிப்பாளர் கூட்டத்துக்கு பதிலடி - டைரக்டர்களின் கிண்டல்
தொடர்களை இயக்குவது என்பது சிறுபிள்ளை விளையாட்டல்ல. பஞ்சத்தில் அடிபட்டவர்கள் மட்டுமே இங்கே தயாரிப்பாளர்களாக உலவுகிறார்கள். அவர்களின் குறைந்த பட்ச பட்செட்டில் நாலே நாலு நடிகைகளையும் அரை லிட்டர் கிளிசரினையும் வைத்து தமிழ் நாட்டையே அழவைத்து மெகா சீரியலை சக்ஸஸ் பண்ணக்கூடிய எங்களையா அவர்கள் பகைத்துக்கொள்ள துணிந்துவிட்டார்கள். இது விரல் சூப்பும் குழந்தை, தன் தாயிடமே கா விடுவதுபோல உள்ளது. நாங்கள் இல்லாவிட்டால் அவர்கள் இல்லவே இல்லை என்று டைரக்டர்கள் சங்க கூட்டத்தில் கிண்டல்.

தயாரிப்பாளர்கள் கொதிப்பு
எங்களை சீண்டுவது சிங்கத்துக்கு பெப்பர்மிண்ட் தருவது போல, தந்தவனுக்கு மினிமம் கையிருக்காது. உங்களை விட திறமையானவர்களை கொண்டுவந்து அமர்த்திக்காட்டுவோம் என்று பதிலுக்கு தயாரிப்பாளர்கள் சூளுரைத்தனர்.

ஏஜெண்ட் நியமனம் - ரகசிய கூட்ட தீர்மானம்
இதனைத்தொடர்ந்து நடந்த ரகசிய கூட்டத்தில் தொ(ல்)லைக்காட்சி சீரியல்களை இயக்கும் லாவகம் வாய்ந்த புதியவர்களை கண்டுபிடிக்கும் பணியை தயாரிப்பாளர் சங்கம் ஏஜெண்டுகளிடம் ஒப்படைத்தது. இதற்கு தெலுகு பட தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஏஜெண்டுகள் வலைவீச்சு
சந்து பொந்து இண்டு இடுக்கு விடாமல் ஏஜெண்டுகள் தேடுதல் வேட்டை நடத்தினர். பத்திரிக்கைகளில் விளம்பரம் தந்தால் டைரக்டர்கள் உஷாராகிவிடக்கூடும் எனவே தான் ரகசியமாக தேடுகிறோம், நீங்களும் இதை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று பத்திரிக்கையாளர்களுக்கு ஏஜெண்டுகள் வேண்டுகோள்.

ஆபத்தை உணரவில்லை
தமிழ் நாடே அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்கும் விபரம் அறியாமலே அப்பாவித்தனமாக தமிழ் உலகம் எனும் மடற்குழுவில் ஒரு தொடர்கதைப்போட்டியை நடத்த ஆரம்பித்தார்கள். போட்டி போட்டுக்கொண்டு ஆளாளுக்கு கதையை பல திசைகளில் இழுத்துச்சென்றனர். தாங்கள் கண்காணிக்கப்படுவதை கதையைக்குதறும் சுகானுபவத்தில் மூழ்கியிருந்ததால் பாவம் அவர்கள் உணரவில்லை.

ஏஜெண்ட் ரிபோர்ட்
அதிரகசியமாக சமர்பிக்கப்பட்ட அந்த ரிபோர்ட் எங்கள் நிருபரிடம் வசமாக மாட்டியது. அது உங்கள் பார்வைக்கு


ஏஜெண்ட் 099இன் அதிரடி ரிபோர்ட்

இங்கே தொ(ல்)லைக்காட்சி தொடர் எடுக்க திறம்படைத்த பலர் இருக்கிறார்கள், அவர்களில் திறமை அடிப்படையில் சிலரை வரிசைப்படுத்தியிருக்கிறோம்

ராமச்சந்திரன் உஷா: இவரிடம் மீட்டர் கணக்கில் பூ சுத்த தேவையான சரக்கிருக்கிறது. எசகு பிசகான சூழ்நிலையில் சீரியல் மாட்டிக்கொண்டால் எல்லாம் மாயை என்று சுலபமாக கதையை திசை திருப்பிவிடுவார்.

இர.அருள் குமரன்: குடும்பக்கதை வைத்து சீரியல் பண்ணும்போது அது ரேட்டிங்கில் டெட் பாடி போல படுத்துவிட்டால் இவர் சடாரென ஆளைக்கொன்று கிரைம் சீரியலாக மாற்றிவிடுவார். அடிக்கடி நடிகைகள் தகராறு செய்யும்போது இவரின் உழைப்பு நமக்கு வெகுவாக பயன்படும்.

ஜெயந்தி சங்கர்:
மாயாஜால சீரியல்களை இவரை வைத்து எடுக்கலாம், பெண்ணை பாம்பாக்குவது, பாம்பை பிசாசாக்குவது போன்ற வேலைகளை இவர் திறம்பட சமாளிப்பார்.

இன்னும் பலர் இருந்தாலும் அவர்கள் இலக்கிய தரத்தோடு எழுத முயற்சிப்பதால் சீரியலுக்கு பயன்படமாட்டார்கள் என்று உறுதியாக நம்பி இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இப்போது மற்ற மடற்குழுக்களையும்
கண்காணிக்கத்தொடங்கியிருக்கிறேன்

பேசிய பாக்கித்தொகை முப்பதாயிரத்தை மன்னிக்கவும் (ஹும்...) மூன்றாயிரத்தை உடனே அனுப்பவும்

இவண்,
ஏஜெண்ட்99

அதிமுக்கிய பின்குறிப்பு: மேற்குறிப்பிட்ட அனைவரும் வெளிநாட்டில் இருப்பவர்கள், அவர்கள் சிக்குவது அரிது. இவர்களில் அருள்குமரன் இப்போது உள்நாட்டில் இருப்பதால் உடனே அமுக்கவும்
 
மயிரிழையில் தப்பியது
இச்சதித்திட்டத்தை சற்றும் அறியாத அ(ட)ப்பாவி அருள்குமரன் சிங்கை திரும்ப விமான நிலையம் செல்லும்போது ஜீப்பில் துரத்திய தயாரிப்பாளர்கள், அருள் குமரன் முப்பிறவியில் செய்த புண்ணியத்தாலோ இப்பிறவியில் செய்யாத பாவத்தாலோ பலத்த பணமுடையோடு காத்திருந்த டிராபிக் போலீஸை ராங்சைடில் கடக்க, அவர் கபக்கென்று அமுக்க, அப்பாடி! ஒருவழியாக தமிழகம் தப்பித்தது.

மீண்டும் கண்டம்
தமிழகத்தின் கேடுகாலம் முற்றாக அகலாத நிலையில் மீண்டும் சிக்கல். மரத்தடி கேவியார் என்பார் தன் பேரைப்போலே எல்லாரையும் கேவி அழவைப்பார் என்று எஜெண்டுகள் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் அவரைப்பிடிக்க சென்னையில் அவரின் நண்பர்களைப்போல வேடமிட்டு தாயாரிப்பாளர்கள் காத்திருந்தனர். அவருக்கு ஆசைகாட்ட கொசப்பேட்டை குப்சாமி வேஷத்தை அவருக்கே கொடுத்து பெரியகுடும்பத்தின் 4ஆவது பெண்ணைக்கட்டிக்கொண்டு 5ஆவது பெண்ணை கற்பழிக்கும் வேலையையும் அவருக்காகவே ஒதுக்கியிருந்தனர் அவரோ ஒரு வாரம் ஒரு நிமிஷமாய் போக்கிவிட்டு நண்பர்களுக்கு கொடுத்த அல்வாவை தயாரிப்பாளர்களும் கொடுத்து தன் பங்குக்கு புண்ணியம் கட்டிக்கொண்டார்.

ஆனாலும் அபாயம் நீங்கிவிடவில்லை
எம்கே குமார் எனும் மரத்தடிவாசி காபிடபரா சகிதமாக தமிழகத்தின் பல இடங்களில் உலவிவருகிறார். கே.வி.ராஜாவின் கண்ணில் பட்ட அவர், ஏஜெண்ட் மற்றும் தயாரிப்பாளர்கள் கண்ணில் படாமலிருக்க எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் ஒரு சேர பிரார்த்திப்போம். இருந்தாலும் விதிவலியது என்பதால் எதற்கும் தயாராக நம் மனதை திடப்படுத்திக்கொள்வோம். சோதனையிலும் ஒரு அதிஷ்டம் போல இன்னும் பெங்களூர் மரத்தடிவாசிகள் ஏஜெண்டுகளின் கண்ணில் படவில்லை, அது இன்னும் எத்தனை நாளைக்கோ?


பத்தாக்கொறைக்கு இத்தப்பாரு!
ஏற்கனவே இருப்பது போதாதென்று சிக்கல் மேலும் வலுத்துவருகிறது. நம் கெட்ட நேரம் எல்லாம் சேர்ந்துவருவதுபோல இந்த நேரம் பார்த்து பெயரில் சுந்தரமான மரத்தடிவாசி தன் குறும்பட ஆசையை எடுத்துவைத்து தயாரிப்பாளர்கள் வயிற்றில் பீர் வார்க்க, 'பத்தாக்கொறைக்கு இத்தப்பாரு', என்னும் கணக்கில் ராஜாவும் உஷாவும் கனவு காண ஆரம்பித்துள்ளனர். இந்தத்தகவல்கள் உடனுக்குடன் ஏஜெண்டுகளுக்கு கிடைத்து வருகிறது.


தகவல் கொடுப்பவர் யார்? - புலன்விசாரணை ரிப்போர்ட்
மடற்குழு விபரங்களை வெளியிடும் நபர் யார் என்று நம் நிருபர்களை விட்டு விசாரித்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல். மரத்தடியிலும் இருந்துகொண்டு தொலைக்காட்சித்தொடர் தொடர்புகளையும் தொடர்ந்துவரும் மாலதிதான் அந்த நபர் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'உஷா'ர்
இந்த சிக்கலான நூடில்ஸ் சூழ்நிலையில் உஷா நவக்கிரகம் சுற்ற தமிழகம் வரப்போகும் தகவல் தெரிந்து தயாரிப்பாளர்கள் ஒன்பது பேர் அவரை சுற்ற இப்போது ஒத்திகை பார்த்துவருகிறார்கள். "இவங்க எல்லாம் ஒண்ணுசேந்தாங்கன்னா, அப்புறம் தமிழகத்தை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது" என்று பிரபல நடிகர் நம் நிருபரிடம் கவலை தெரிவித்தார்.

இனி என்ன நடக்குமோ யாருக்கு தெரியும்
விதிவிட்டவழி

அன்பான வம்புடன்,
இர.அருள் குமரன்

பின்குறிப்பு 1: மேலே எழுதியுள்ளவற்றால் நேரடியாகவோ(பெயர் குறிப்பிடப்பட்டவர்கள்),
மறைமுகமாகவோ(இதைப்படித்தவர்கள்) பாதிக்கப்பட்டவர்கள் இவற்றை ஹாஸ்ய உணர்வுடன், லேசாக எடுத்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்

பின்குறிப்பு 2: "துன்பம் வரும் வேளையிலே சிரிங்க" என்று சொல்லிவைச்சார் வள்ளுவரு, சரிங்க.





Tuesday, July 13, 2004

வாலிப வயதும் பாலியலும்-2

நான் நினைக்கிறேன், மரத்தின் வேர் மண்ணில் இருப்பதுபோல் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆணிவேர் மனதினில் புதைந்திருக்கிறது. பாலியல் பிரச்சனைகளிலும் முதலில் அடிபடுவதும், அதிகம் காயப்படுவதும், ஆறாத்தழும்புகள் அடைவதும் மனதுதான், எனவே உளவியல் ரீதியாக இப்பிரச்சனையை அணுகுவது பலன் தரும்.

ஆரம்பம் எங்கே இருக்கிறது?
பாகுபாடு பல பிரச்சனைகளுக்கு ஆரம்பம், இதற்கும்தான். நீ ஆண், நீ பெண், நீ இன்னது செய்யலாம், இன்னது செய்யக்கூடாது என்று வரையறுக்கும்போது நாம் சில தவறுகள் செய்துவிடுகிறோம். சில உதாரணங்கள்

"அடேய் ராமு! விளையாட்டுல அடிபட்றது சகஜம், அதுக்காக ஏன் பொட்டச்சி மாதிரி அழறே!"


"பொண் குழந்தையா லட்சணமா கூடத்தில மாலுவோட விளையாடவேண்டியதுதானே? அந்த தடியன்களோட என்னடி பேச்சு?"

இந்தியாவின் சமூக அமைப்பில், பொதுவாக சிறுவர்களும் சிறுமிகளும் கலந்துபழக வாய்ப்புகள் குறைவு.

இத்தகைய சூழலில் சகோதரி, அம்மா தவிர பிற பெண்களுடன் பழகாத சிறுவன் இளைஞனாகி உள்ளுக்குள் மாற்றங்கள் அடையும்போது எதிர்ப்படும் பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்க வாய்ப்புக்கள் அதிகம்.

பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்ணுக்கு, அந்நிய ஆண் வழிமறித்து சாதாரணமாக பேசத்துவங்கினாலே அநியாயத்துக்கு நடுக்கம் வருகிறது, அவளின் பயம் அவனுக்கு ஊக்கம் தருகிறது. இயல்பாக பதிலளித்து சென்றால் அவனே அவளின் நண்பனாக மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதும், அவனுடைய நோக்கம் சரியானதல்ல என்றால் அவனிடமிருந்து எப்படி தன்னை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்பதும் அவளுக்கு தெரிவதில்லை. இவ்வகைப்பெண்கள் பாலியல் வன்முறைக்கு பலியாகும்போது அதை தாங்கமுடியாமல் தன் தவறாகவும் நினைத்து தற்கொலைக்கு முயல்கிறார்கள். இத்தகைய சுழலில் பெற்றோர் தங்கள் பொறுப்புணர்ந்து அவளின் மனநிலை புரிந்து ஆறுதலாக செயல்படவேண்டும்.

ஒரு பருவப்பெண், அல்லது இளைஞனோ தன் எதிர்பாலரோடு நட்புடனிருப்பதை பெற்றோர் என்ற முறையில் நீங்கள் எதிர்ப்பதானால் வலுவான, நியாயமான காரணங்களை முன்வையுங்கள், கட்டாயம் அவர்கள் ஏற்பார்கள், அதை விடுத்து அவர்களை சிறுவர்களாகவே நடத்தினால் அவர்கள் சீர்தூக்கிப்பார்க்கும்போது நீங்கள் அடிபட்டுப்போய்விடுவீர்கள்.

வதந்திகளுக்கு ஒலிபரப்பு நிலையமாக ஒருபோதும் செயல்படாதீர்கள். சில உதாரணங்கள்

"டீ வசந்தி, நம்ம எதித்தவீட்டுப்பொண்ணு காரக்டர் சரியில்லேன்னு அப்பவே சொன்னேனே, நீதான் நம்பலை! இன்னிக்கு பஸ்ல வரச்சே பார்க்குல பாத்துட்டேன் அவளை, எவனோ ஒரு தடியனோட"

அந்த தடியன் அவள் அண்ணனாகவே கூட இருந்திருக்கலாம் அவர்களுக்கு அதை கவனிக்க அவசியமோ நேரமோ ஏது? சுவாரஸ்யமாக சொல்வதற்கு தேவையான விஷயம் ஏற்கனவே கிடைத்துவிட்டதே!

"அந்த மேனேஜரும் புது டைப்பிஸ்டும், இவ்ளோ நேரமா ரூமுக்குள்ள என்னடா பண்றாங்க! ஆபீஸ் வேலை பாக்கறாங்கன்னு என்னை நம்பச்சொல்றியா! ஒரு பார்வைலேயே சொல்லீடுவேன் மச்சி, பட்சி என்ன டைப்புன்னு"

இப்படி ஒரு கண்ணோட்டதில் நம் வாரிசுகளைப்பார்த்தாலும் எல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்.

வாரிசுகளிடம் பேசும்போது நம்முடைய அலுவலக அழுத்தத்தை, பிற பிரச்சனைகளை தள்ளிவைத்துவிட்டு பேசவேண்டும் அதைவிட முக்கியமாக அவர்கள் சொல்வதை கவனித்து கேட்கவேண்டும். அவர்களிடம் பேசும் போது தகப்பன்/தாய் என்ற உயர்ந்த பீடத்தில் அமராமல் அவர்கள் நிலைக்கு இறங்கிவந்து பேசுங்கள், நாமும் அவர்கள் வயதை கடந்துதான் வந்திருக்கிறோம். நாம் கடந்துவந்த பாதையை சமயமறிந்து பகிர்ந்துகொண்டால் நம் தவறுகளில் கூட அவர்கள் கற்பார்கள்.

இது இப்படியிருக்க நவின நகர்புறங்களிலும், வெளிநாடுகளிலும் வேறு மாதிரி சூழல், அளவுக்கு மிஞ்சிய சுதந்திரம்

அது அடுத்து...

Tuesday, July 06, 2004

வாலிப வயதும் பாலியலும்-1

ஏற்கனவே பாலியல் வன்முறை பற்றி ஒரு கதை எழுதவேண்டும் என்று வெகுகாலமாக நினைத்திருந்தேன். இப்போது வரிசையாக என்னைத்தூண்டும் வண்ணம் சம்பவங்கள் நடந்துவருகின்றன. தற்காலப்பெண்பாற்கவிஞர்கள் தங்கள் பாலுறுப்புப்பற்றி எழுதுவது பற்றிய இழையில் மதுரபாரதி, யோனி என்கிற வார்த்தையை பயன்படுத்தாமல் எழுத இயலாத இந்த ஆங்கிலக் கதையைப்பற்றி குறிப்பிட்டார்,

பின்னர் உள்ளூர் தொலைக்காட்சியில் "பதின்ம வயதினரின் பாலியல் பிரச்சனைகளை பெற்றோர்கள் சமாளிக்கும் விதம்" எனும் பயிற்சிப்பட்டறை குறித்த விளம்பரம் பார்த்தேன். இரண்டு நாட்களில் வெவ்வேறு சமூகக்கூடங்களில் நடைபெற்ற அந்நிகழ்சியின் முதல் நாள் ஏற்கனவே கடந்துவிட்டது. இரண்டாம் நாளான ஞாயிறு அன்று நான் நேரில் கண்டதும் கேட்டதும் உணர்ந்ததும் கீழே தொகுத்திருக்கிறேன்.

முதலில் உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியான 'குரு பார்வை' எனும் தொடரிலிருந்து பட்டறைக்கு தொடர்புடைய காட்சித்தொகுப்பு திரையிடப்பட்டது. அந்ததொடரை நான் ஏற்கனவே சிலவாரங்கள் பார்த்திருக்கிறேன், ஆசிரியர் மாணவர் உறவில் எழக்கூடிய சிக்கல்களை வெகு அழகாக படம்பிடித்திருக்கிறார்கள்.

கட்டுப்பாடற்ற பதின்ம வயதுப்பெண் இணையத்தில் முகந்தெரியாத நபருடன் அளவளாவி நேரில் சென்று சிக்குதல், இளையர்களுக்கிடையே ஏற்படும் தகராறுகள் போன்ற விஷயங்கள் திரையிலோடின. இதில் நடித்தவர்களும் நேரில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

இளையர்கள் சில நிகழ்வுகளை மேடையில் நடித்துக்காட்டினர், இரண்டு மூத்த(அகவை அல்ல!) சமூக சேவகிகள் நிகழ்ச்சியை வழிநடத்தினர். அதிக ஆங்கிலமும் கொஞ்சம் தமிழும் கலந்து படைக்கப்பட்ட நிகழ்சியில் வலியுறுத்தப்பட்ட கருத்தின் சாரம் பின்வருமாறு

பெற்றோர்களுக்கான அறிவுரைகள்:
நம் பதின்ம வயதுப்பிள்ளைகளுடன் உறுதியான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுதல்

  • உங்கள் குழந்தைகள் வாழும் உலகை தெரிந்துகொள்ளுங்கள், அவர்கள் என்ன அழுத்தம் உணர்கிறார்கள்? எதை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்? நாம் அவர்களின் செயல்களிலும், நண்பர்களிடமும் ஆர்வம் காட்டினால், அவர்கள் நம் அக்கறையையும், அவர்கள் வாழ்வில் நம் பங்கையும் உணர்வார்கள்.


  • நல்ல உதாரணங்களை ஏற்படுத்தி, நன்மதிப்பு எவ்வாறு நம் வாழ்வை செழிப்பாக்குகிறது என்று உணர்த்துங்கள்.


  • பிள்ளைகளின் உதவிக்கும் தேவைக்கும் நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துங்கள், நம் யோசனைகளையும் கருத்துக்களையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.


  • அவர்கள் உங்களை கேட்காவிடிலும் நீங்கள் அவர்களை கேள்வி கேளுங்கள், அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் அவர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது என்பது குறித்து கேளுங்கள்.


  • அறிவுரை சொல்ல வாய்க்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு நண்பரின் கர்பம், உலவும் வதந்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவை உங்கள் பேச்சை துவங்க உதவலாம்.


  • உங்கள் உணர்வுகளிலும் மதிப்பீடுகளிலும் தெளிவாக இருங்கள். பதின்மவயது பிள்ளைகளிடம் பேசும் முன்பே, என்ன பேசவேண்டும் என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள். நம் துணை(வர்/வி), நண்பர், அல்லது நம் நம்பிக்கைக்குரிய நபரிடம் இது குறித்து உரையாடுவது நம் சேதியை தெளிவாக்கிக்கொள்ள உதவும். அது பிள்ளைகளிடம் பேசுவதற்கு தேவைப்படும் நம்பிக்கையையும் வழங்கும்.


கவனிக்க வேண்டியவை:

  • உங்கள் பிள்ளைகளின் தன்மதிப்பை வளர்த்துவிடுங்கள். அவர்களின் திறமைகள், குணாதிசயங்கள், சாதனை ஆகியவற்றுக்கு மதிப்புக்கொடுங்கள்.


  • அவர்கள் இயல்பாகவே இருப்பதை மறு உறுதிப்படுத்துங்கள்.


  • நம்முடைய உடலசைவுகள், முகபாவனை, நயம், குரல் ஆகியவை நாம் சொல்லும் சொல்லுக்கு துணை நிற்கட்டும்.


  • தெளிவான, நேர்மையான, சுலபமாக புரியக்கூடிய சிறிய பதில்களை அளியுங்கள்.


  • பகிர்ந்துகொள்ளும்போது காட்சிகளையும் நிறங்களையும் பயன்படுத்துங்கள்.


  • அவர்களின் தவறுகளை கற்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்துங்கள். குறைகூறுவது, திட்டுவது, புத்திமதி கூறுவது, கத்துவது இவை அவர்கள் கற்க உதவாது.


பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும் குறிப்புகள்:

  • கேள்விகளை உள்ளர்த்தம் கற்பிக்காது ஏற்றுக்கொள்ளுங்கள், உதாரணத்துக்கு 'எத்தனை வயதில் பாலியல் உறவுகொள்ளமுடியும்?' என்ற கேள்விக்கு 'நான் உடலுறவு கொள்வது பற்றி சிந்திக்கிறேன், அதற்கு என்ன செய்யவேண்டும்?' என்று அர்த்தமல்ல, பாலியல் பற்றிய கேள்விகள் பெரும்பாலும் குடும்பத்தின் மதிப்பை உணரவே முயற்சிக்கின்றன.


  • இது குறித்து பேசுவது சங்கடமாக இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.


  • பாலுறுப்புகள், பாலியல் ரீதியான செயல்கள் ஆகியவற்றை அவற்றின் சரியான பெயர்களால் குறிப்பிடுங்கள். சங்கடமாக இருந்தால் அப்பெயர்களை உரக்க சொல்லி அல்லது கண்ணாடி முன் சொல்லி பழகுங்கள் (சொந்த எச்சரிக்கை: உரக்கச்சொல்வது என்றால் பக்கத்து வீட்டுக்காரருக்கு கேட்குமளவு உரத்து அல்ல, கண்ணாடி முன் சொல்லும்போதும் கேட்கும் தூரத்தில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் அல்லது உங்களின் மறுபாதியிடம் முன்பே செய்யப்போவதை சொல்லி விடுங்கள் இல்லாவிட்டால் அதி தர்மசங்கடமான நிலை ஏற்படலாம்)


  • கேட்கப்பட்ட கேள்விக்கு விடை தெரியாது என்றால் ஒப்புக்கொள்ளுங்கள், பின்னர் அவர்களுக்கு விடையை புத்தகத்திலோ வேறு வகையிலோ தேட நாமே உதவலாம்.


  • எல்லா விபரங்களையும் ஒரே நேரத்தில் வழங்கவேண்டியதில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.


  • அவர்களின் அந்தரங்கத்தையும் நம்முடையதைப்போலவே மதியுங்கள். தேவைக்கதிகமாக மூக்கை நுழைக்காதீர்கள்


மற்றபடி (அனைவரும் பகிர்ந்துகொண்ட கருத்துகளின் தொகுப்பு)

  • இணைய இணைப்பு உள்ள கணினியை தனிமையற்ற, கண்காணிக்க உகந்த கூடம் போன்ற இடங்களில் வைத்துவிடுவது உத்தமம்.


  • உங்களின் ஒழுக்கததைப்பேணுங்கள், நடு இரவில் தந்தை பார்க்கும் நீலப்படம் மூலமாக தூண்டப்பட்ட குழந்தைகள் உண்டு


  • பதின்ம வயதினரிடம் நிறைய சக்தி இருக்கிறது, அவற்றை செலவழிக்க உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளைக்கொடுங்கள் அவர்களை நடனம், விளையாட்டு முதலியவற்றில் ஈடுபடத்தூண்டுங்கள். வேலையில்லாதவன் மூளை சாத்தானின் பட்டறை.


  • பதின்ம வயதினரை அதி நவீன ஆடை அலங்காரப்பிரியர்கள்(இதிலே பல குழுக்கள் உண்டு),அடங்காதவர்கள், படிப்பாளிகள் என்று பிரிவுகளாக பிரிக்கலாம். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது, படிப்பாளிகள் கண்டதையும் படிக்கவும் வாய்ப்பு இருக்கிறது


  • அழகான/களையான எதிர் பாலரைப்பார்க்கும் போது மனதுக்குள்ளாவது ஒரு விமரசனம் வரவேண்டும் அப்போதுதான் இயல்பாக இருப்பதாக அர்த்தம் (இதுவும் அடுத்த மூன்று கருத்துக்களும் மருத்துவ ஆலோசகருடைது)


  • சுய தீண்டல், ஈரக்கனவு போன்றவை இயல்பானது, அதன் அளவை மீறினால்தான் ஆபத்து


  • தன்னுடைய பாலுறுப்பில் அடிக்கடி கையை வைத்திருப்பவர்கள் எல்லோரும் சுயதீண்டல் தான் செய்கிறார்கள் என்று அர்த்தமல்ல, சிலருக்கு அங்கே ஏற்பட்டுள்ள வியாதியும் அதனால் ஏற்படும் அரிப்பும் காரணமாக இருந்திருக்கிறது


  • ஒரு பன்னிரண்டு வயதுப்பெண் கர்ப்பமானது தெரியாமலே ஆனால், ஆறுமாத கர்பத்துடன் சொன்னாள் "டாக்டர் என் வயித்துக்குள்ள ஃபுட்பால் இருக்கு". இப்படியும் இருக்கிறார்கள்


  • இந்த பாலியல் விவகாரமெல்லாம் என் குழந்தைக்கு தேவையில்லை என்று விட்டுவிடாதீர்கள் நீங்கள் சொல்லாததால் அவர்களுக்கு தெரியாமல் போகாது, நீங்களே சொன்னால் தவறான தகவல்கள் அவர்களுக்கு கிடைப்பதை தடுக்கலாம்


  • என்னுடைய நண்பன் விந்து வெளியாவதற்கு முன்பே வெளியே வெளியே எடுத்துவிடுகிறான் அதனால் நான் கர்ப்பமாகமாட்டேன் என்று நினைப்பது தவறு ஏனெனில் நாம் உணராமலே, அடையாளம் இல்லாமலே, முன்னரே விந்து உட்செல்ல வாய்ப்பு இருக்கிறது.


  • முதல் முதலாக உடலுறவு கொள்ளும்போது கர்ப்பமாகாது என்பதும் உண்மையல்ல.


  • கர்பத்தை தவிர்க்க உபயோகிக்கும் ஆணுறை போன்ற சாதனங்கள், மாத்திரைகள் நூறு சதம் பலனளிக்கும் என்று கூறமுடியாது. பல சந்தர்ப்பக்களில் அவற்றின் தோல்வி நிறுபணமாகியுள்ளது.


  • சந்தர்ப்பங்களில் எதிர் பாலர் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆயுதம், "நீ என்னை விரும்புவது உண்மையானால் இதற்கு சம்மதி", "நான் உன்னோடு மட்டுமே உறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்", "நாம் அனைவரும் நண்பர்கள் நம்முள் இந்தமாதிரி தேவையற்ற தயக்கங்களும் ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது", இது போன்ற உணர்வுப்பூர்வமான அச்சுறுத்துதல்களுக்கு எப்படி மயங்காமல்/தயங்காமல் பதிலளிப்பது என்று அவர்களுக்கு பயிற்சி கொடுங்கள்.


  • கைகளை வணக்கம் வைப்பது போல உயரத்தூக்குங்கள் அங்கிருந்து மடக்காமல் தொடைவரை கீழிறக்குங்கள், இடைப்பட்ட பகுதி முழுவதும் அந்நியர் தீண்டக்கூடாத பகுதி (பாலுறுப்புகள் மொத்தமும் இதற்குள் அடங்கும்) என்பதை சொல்லி தவறான தீண்டலை அடையாளம் காட்டுங்கள்.


  • குழந்தைகளிடையே பால் அடிப்படியில் வேறுபாடு காட்டாதீர்கள், உதாரணத்துக்கு "அவுரு எல்லாம் நல்லாத்தான் படிக்கிறாரு, இவதான் சரியில்லை" இங்கே 'அவுரு' இளைய மகன், 'இவ' மூத்த மகள்.


  • ஒரு பெண் பருவம் அடையும் போது நாம் அதை விழாவாக கொண்டாடவும் செய்கிறோம், அதே நேரத்தில் அசுத்தம் என்கிறோம். இது அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. முறையாக அவளிடம் நிகழ்வதை விளக்குங்கள்


  • அவர்கள் பருவம் அடையும் போது ஏற்படும் மாற்றங்கள், வியர்வை/உடல் நாற்றம் போன்றவை அவர்கள் மனதை பாதிக்காமல் பாத்துக்கொள்ளுங்கள், நாற்றம் நீக்கும் வாசனைத்திரவியங்கள் போன்றவற்றை உபயோகிக்க சொல்லிக் கொடுங்கள், எக்காரணம் கொண்டும் அருவருப்பு காட்டாதீர்கள்.

மேலும் இப்பிரச்சனை குறித்த என்னுடைய கருத்துக்களோடு தொடர்வேன்.