உள்ளத்து ஓசை

Wednesday, October 13, 2004

உங்கள் திஸ்கி வலைப்பதிவு தமிழ்மணம் வீசவேண்டுமா?

ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் வலைப்பதிவை திஸ்கியிலேயே (Tscii) அமைத்து விட்டீர்கள். தமிழ்மணம் உங்கள் பதிவையும் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஆனால் தமிழ்மணமோ உங்கள் பதிவை, புரியாத ஆங்கில எழுத்துக்களாக காட்டுகிறதே என்று வருத்தப்படுகிறீர்கள்.

இதோ உங்களுக்கான தீர்வு

உதாரணத்துக்கு இராமகி ஐயாவுடைய வளவு வலைப்பதிவை எடுத்துக்கொள்வோம். இப்பதிவிற்கான Atom ஊட்டின் முகவரி

http://valavu.blogspot.com/atom.xml

இந்த ஊட்டை அப்படியே தமிழ்மணம் தளத்தில் இட்டால் மேற்கண்ட பிரச்சனை வரும்

என்னுடைய திஸ்கி -> யுனிகோடு மாற்றியை அலுவலக தளத்தில் நிறுவியுள்ளேன் அதைக் கீழ்கண்டவாறு பயன்படுத்தி ஊட்டை யுனிகோடு தமிழாக மாற்றிக் கொள்ளலாம்

http://dann.sytes.net:8080/converter/tscii2unicode/?rss=http://valavu.blogspot.com/atom.xml

கிடைக்கும் புதிய முகவரியோடு தமிழ் மணம் தளத்தில் பதிவு செய்துகொண்டால் உங்கள் வலைப்பதிவும் தமிழ் மணம் வீசத்தொடங்கும்

உங்கள் வலைப்பதிவு UTF-8 Encodingஐ உபயோகிக்காவிட்டால் கூட "&utf=false" சேர்த்துக்கொள்ளுங்கள்

இப்படி

http://dann.sytes.net:8080/converter/tscii2unicode/?rss={atom/rss ஊட்டு முகவரி இங்கே}&utf=false

இனி உங்கள் வலைப் பதிவையும் நாங்கள் தமிழ்மணம் ஊடாக படித்து ரசிக்கலாம் அல்லவா?

Wednesday, October 06, 2004

எண்ணும் எழுத்தும்

இரண்டுமே கண்ணெனத் தகும்தான் ஆனால் சில சமயம் எழுத்துக்களுக்கு பதில் எண்களாக மடலில் வந்தால் என்ன செய்வது?

கீழ்க்கண்ட உதாரணத்தைப் பாருங்கள்

ஓரிரு எண்ணங்கள்

இப்படி HTML encode செய்யப்பட்டு எண்களாக காட்சியளிக்கும் எழுத்துக்களை எப்படி நமக்கு புரியக்கூடிய எழுத்துக்களாக மாற்றுவது?

சுலபமான வழி இருக்கிறது. HTML encodingகுக்கு HTML தான் தீர்வு

முதலில் notepadஐ திறந்து <pre> என்று உள்ளிடவும் பின்னர் மடலிலுள்ள எண்களை ஒத்தி ஒட்டவும் பின்னர் </pre> என்று முடித்து HTML கோப்பாக சேமிக்கவும் (அதாவது .txtக்கு பதிலாக .htm அல்லது .html என்று கோப்பின் பெயர் முடியும் வண்ணம் சேமிக்கவும்)


எடுத்துக்காட்டு

<pre>
&#2963;&#2992;&#3007;&#2992;&#3009; &#2958;&#2979;&#3021;&#2979;&#2969;&#3021;&#2965;&#2995;&#3021;
</pre>

பின்னர் இரட்டைச் சொடுக்கலில் கோப்பை உங்களின் இணைய உலாவியில் திறக்கவும். இப்போது எண்கள் மீண்டும் எழுத்துக்களாகி உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் இப்படி

ஓரிரு எண்ணங்கள்

இனிமேல் எண்களையும் எளிதாக எழுத்துக்கள் ஆக்கிக் கொள்வீர்கள்தானே?

Monday, October 04, 2004

அ.பு.பயிற்சி-4: பேரழிவிற்குப் பின்...

அழிந்துவிட்ட உலகில் எஞ்சிவிட்ட என்னைப் போன்றவர்களுக்கு உயிரைப்பாதுகாப்பது தவிர வேறு எந்தப்பணியும் இருக்கவில்லை. ஆனால் அதைவிடச் சிரமமான பணி வேறெதுவும் இருக்கமுடியாது. நாட்களை என் கைகளில் கிழித்துக்கொண்ட கோடுகளைக் கொண்டுதான் அளக்கிறேன். கதிரியக்கத்தால் கருகி நிற்கும் தாவர வகைகளைத் தவிர வேறு ஒரு உயிரினத்தைக் கண்ணால் கண்டு இன்றோடு இருபத்தோரு நாட்களாகின்றன. நெடுந்தொலைவு நடந்து, அலைந்து திரிந்துதான் கதிரியக்கத்தால் ஒளிவீசாத சில பச்சை மரங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது. மிகுந்த சிரமத்துடன் அவற்றின் தண்டின் நடுப்பகுதியை மட்டுமே என் உணவாக்கிக்கொள்கிறேன், ஆனாலும் கதிரியக்கத்தின் பாதிப்புகள் என்னுள் ஆரம்பமாகிவிட்டதை உணரமுடிந்தது.

நீர் நிலைகளும் பாழடைந்திருந்தன. அனேகமாக நீர் வழியாகத்தான் என் உடல் பாதிப்படையத் தொடங்கியிருக்கவேண்டும். காற்றும் தன் பணியை செவ்வனே செய்துவருகிறது. மொட்டையடிக்கப்பட்ட வனாந்திரங்களின் வழியே என் தேடல் தொடர்கிறது. தூரத்தில் எங்கேனும் புகை கசிவதைப்பார்த்தால் உடனே ஏதேனும் ஆழ்நிலக்குடியிருப்போ பதுங்குகுழிகளோ கண்ணில் படுமா என்று அருகில் சென்று பார்க்கிறேன் அங்கே பதுக்கப்பட்டிருக்கும் உணவு என் வாழ்நாளை நீடிக்க உதவக்கூடும்.

ஒரு பக்கம் நிராசையாக இருக்கிறது எனக்கு, இப்படி வாழ்வைத்தொடர்ந்து நான் எதை சாதிக்கப்போகிறேன். உண்மையில் இத்தனை போராடுவதை விட அமைதியாய் ஓரிடத்தில் அமர்ந்து உயிரை விட்டுவிடலாம். நானும் முயற்சித்திருக்கிறேன், ஒரு குருட்டு முயல் என் தவத்தைக் கலைத்துவிட்டது.

இப்படி எண்ணங்கள் என்னை குத்திக் குதறி பல திசைகளில் இழுத்துச்சென்ற வேளையில் தற்செயலாகத்தான் ஒரு புகைக் காளான் குடை விரித்திருப்பதைப் பார்த்தேன். நிச்சயம் அங்கே ஏதோ இருக்கிறது. மரக்கத் துவங்கிவிட்டிருந்த காலை உதறி சக்தியை மீண்டும் நெஞ்சில் நிரப்பிக்கொண்டு புறப்பட்டேன். அருகில் நெருங்கியவுடன் அந்தப் பதுங்குகுழி காணக்கிடைத்தது. அதன் எஃகு கதவுகளை திறக்க, செய்த முயற்சிகள் வெற்றி தரவில்லை. முழுபலத்தையும் கைகளில் திரட்டி கைப்பிடியைப் பற்றி இழுத்தபோது திடீரென லகுவாக விடுபட்டது. நான் சற்றுத் தொலைவில் போய் விழுந்தேன்.


* * * * * * * * * * * * * * * * * *

இனி இந்தக்கதையை எப்படி தொடரப் போகிறீர்கள்?